செந்தமிழ்

Tuesday, May 02, 2006

ஏன் குளிர்கண்ணாடி அணியவேண்டும்?

ஏன் குளிர்கண்ணாடி அணிய வேண்டும் - ஐந்து காரணங்கள்

1. நல்ல தரமான குளிர்கண்ணாடிகள் உங்கள் கண்களை சூரியனிடமிருந்து வெளிப்படும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களிடமிருந்து நூறு சதவீதம் பாதுகாக்கின்றன. கண்களை மட்டுமன்றி மிகவும் மென்மையான எளிதில் பாதிக்கப்படும் கண்களைச் சுற்றியுள்ள தோல் பகுதிகளையும் இவை காக்கின்றன அதன் மூலம் சுருக்கம் விழுதல், இளம் வயதிலேயே முதுமைத் தோன்றத்தைப் பெறுதல் போன்வற்றிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம்.

2.குளிர்கண்ணாடிகள் ஒளிச்சிதரலை குறைக்கின்றன. அனைத்துத் தளங்களும் ஒளியைச் சிதரடிக்கவல்லவை. பொதுவாக தண்ணீர், வாகனங்களின் கண்ணாடிகள் போன்றவை ஒளியைச் சிதரடித்து அவைகளை பல பக்கங்களிலும் பிரதிபலிக்கவல்லவை. இவை மிகவும் ஆபத்தானவை இத்தகைய ஒளிச்சிதரல்களின் பாதிப்பிலிருந்து நமது கண்களை குளிர்கண்ணாடிகள் காக்கின்றன. போலரைஷ்டு பூச்சுக்கொண்ட கண்ணாடிகள் இவ்வாறான ஒளிச்சித்ரல் பிரதிபலிப்பை முற்றிலுமாக குறைத்து நமது பார்வைக்கு ஒரு இனிமையான அனுபவத்தை தருகின்றன.

3.குளிர் கண்ணாடிகள் நமது கண்களை கொடுங்காற்று, தூசிகள், உடைந்து தெரித்து விழும் ஆபத்தான சிதரல்கள் போன்றவற்றிலிருந்தும் காக்கின்றன. கண்களை முழுமையாக மறைக்கக்கூடிய விதத்தில் தயாரிக்கப்படுகின்ற, விளையாட்டில் பயன்படுகின்ற குளிர்கண்ணாடிகள் இவ்வகையில் மிகச் சிறந்தவை.

4.அளவுக்கு அதிகமான வெளிச்சத்தை நமது கண்ணின் ஒளித்திரையினால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே நமது கண்ணின் மணிகள் சுருங்கி விரிந்து உள்செல்லும் ஒளியின் அளவை கூட்டியோ அல்லது குறைத்தோ கொடுக்கின்றன. இருளில் அதிகம் விரிந்தும், நல்ல ஒளியில் சுருங்கியும் ஒளியை உள்வாங்குகிறது. அப்படிச் சுருங்கியும் அதிகமான ஒளி உள்செல்லும் நேரத்தில் நமது கண்ணிமைகளும் சுருங்கி மேற்கொண்டு ஒளியைக் குறைத்து உள்செலுத்த உதவுகின்றன. இவ்வாறு நாம் அதிகமாக கண்களுக்கு அழுத்தம் கொடுத்து பார்க்க நேரிடுவதால் நமக்கு தலைவலி மற்றும் கண்களில் வலி மற்றும் சோர்வு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. குளிர்கண்ணாடிகள் அணிவதன் மூலம் போதுமான அளவுக்கு ஒளி வடிகட்டப்பட்டு உட்செலுத்தப்படுவதால் கண்களில் நாம் அழுத்தம் கொடுக்கவோ சுருக்கவோ தேவையில்லை. எனவே பார்வை சாதாரணமானதாகவும், கண்களுக்கு இதம் கொடுப்பதாகவும் இருக்கும்.

5. தெளிவான பார்வைக்கு குளிர்கண்ணாடிகள் பெரிதும் உதவுகின்றன. அதிகமான ஒளி எந்த அளவுக்குக் கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கின்றனவோ அதுபோலவே குறைவான ஒளியும். குளிர்கண்ணாடிகள் சரியாண அளவில் ஒளியை வடிகட்டி அணுப்புவதால் தெளிவான பார்வை நமக்கு கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு கண் பாதிப்புகள் வராமல் காக்கப்படும். கோடைகாலங்களில் வாகனங்களை ஓட்டுபவர் மற்றும் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக குளிர்கண்ணாடிகள் அணிவதன் மூலம் அதிவிரைவான கண்பாதிப்புகளைத் தவிர்த்து நல்ல தெளிந்த பார்வையோடு வாழலாம்.

Monday, May 01, 2006

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு

இன்றைய இளைய தலைமுறையினருக்கு இடஒதுக்கீடு பற்றிய சரியான அறிவு இல்லை என்பதும் அதுபற்றிய தெளிவான அறிவு அவர்களுக்கு ஊட்டப்படவேண்டும் என்பதிலும் எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இல்லை. இடஒதுக்கீடு பற்றிய விவாதங்களில் உயர்சாதியினர் போன்று பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் கலந்துகொண்டு தம்முடைய வாதங்களை எடுத்து வைக்க முன்வருவதில்லை என்பதும் வருத்தம் அளிக்கும் செய்தியே.

கடந்த ஆயிரக்கணக்கான வருடங்களாக நூறு விழுக்காடு இடஒதுக்கீட்டை தானாகவே எடுத்துக்கொண்ட உயர்ஜாதியினர் இன்று அவை பறிக்கப்பட்டு அதற்குப் பதிலாக வேறொருவருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பொழுது மனம் புழுங்குவதும், பொங்கியெழுவதும், போராட்டம் நடத்துவதும் இயல்பே. ஆனால் அவர்கள் இச்சமயத்தில் இங்கே முன்வைக்கும் வாதமோ "அறிவு மற்றும் சாதனைத் திறன்" பற்றியது. இடஒதுக்கீடு காரணமாக வளர்ந்துவரும் இந்திய தேசத்தில் அறிவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும், இது வளர்ச்சியில் மிகப்பெரிய தடைக்கல்லாக முன்னிற்கும் என்பது இவர்களுடைய வாதம்.

தனியார் நிறுவனங்களும் இதில் சலைத்தவர்கள் இல்லை. ஆசிம் பிரேம்ஜி, தன்னுடைய தொழிலானது அறிவு சார்ந்த பணித்துறை, இங்கு நான் அறிவு மற்றும் சாதனைத்திறன் அடிப்படையிலேயே வேலை வாய்ப்பு வழங்கமுடியும் என்று அறிவித்திருக்கிறார். இடஒதுக்கீடு என்பது தகுதியான மாணவர் வரிசையில் பின் தங்கிய வகுப்பினருக்கு சரியான சதவீதத்தில் நிரவல் இருக்கவேண்டும் என்பதேயொழிய அது முட்டாள்களை வேலைக்கு வைத்துக்கொள் என்பது இல்லை என்று அவர் அறியாமலிருக்கிறாரா என்ன?


இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை தமிழகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டான மாநிலமாக விளங்குவது கண்கூடு. இன்று அனைத்துத் துறையிலும் அனைத்துவகுப்பினரும் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். பொருளாதார ரீதியில் நன்கு வளர்ந்துள்ளது. எத்தனையோ உயர்வகுப்பினர் என்று கூறிக்கொள்ளும் அறீவு ஜீவிகள் தாமிழகமென்ன நாட்டைவிட்டே வெளியேறிவிட்ட பொழுதிலும் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் வெற்றிநடை போடுகிறது. வழக்குரைஞர்கள், மருத்துவர், பொறியியலார் என எல்லாத்துறைகளிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஒருகாலத்தில் வழக்குரைஞர் என்றால் இவர் இப்படித்தான் பஞ்சகட்சம் கட்டி, நன்றாக நாமத்தை மேலே இழுத்துவிட்டிருப்பார், ஆசிரியர் என்றால் இப்படித்தான் இருப்பார் என்ற உருவ வேற்றுமை மறைந்து மங்கியிருக்கிறது. இவையெல்லாம் எப்படிச் சாத்தியப்பட்டது என்பதை ஆராய்ந்து பார்த்தால் தமிழகத்தை ஆண்ட திராவிட இயக்கங்களை நாம் மெச்சியேயாக வேண்டும்.

சீதாராம் யெச்சூரி சொல்லுவது போல " இட ஒதுக்கீட்டால் திறமையானவர்களை உருவாக்குவது பாதிக்கும் என்று எடுத்துக்கொண்டால் நாம் மறைமுகமாக பணக்கார வர்க்கத்தினருக்கு அவ்விடங்களை ஒதுக்கியிருக்கிறோம் என்றே பொருள். எத்தனை பணக்காரர்கள் தனது அறிவுத்திறனால் உயர் மற்றும் தொழில் கல்லூரிகளில் இடங்களைப் பெருகிறார்கள்? மிக மிகக் குறைவு. ஆனால் அவர்கள் தனது பணபலத்தால் இடங்களை வாங்குகிறார்கள். வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீடுகள் ஏலமிடப்பட்டு அதிக விலைக்கு வாங்குபவர்களுக்கு இடங்கள் விற்கப்படுகின்றன. அவர்களை விட திறமையான பிற்படுத்தப்பட்ட, காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு இடம் கிடைப்பதில்லையே? "

சிலர் பொருளாதார ரீதியிலாகத்தான் இடஒதுக்கீடு அமையவேண்டும் அவ்வாறில்லாமல் சாதிவாரியாக ஒதுக்கீடு அளித்தலால் சாதி வேறுபாடுகள் இன்னும் கூடிக்கொண்டிருக்குமேயொழிய குறையாது என்று அவரவர் அறிவுக்கு எட்டிய வாதங்களை அள்ளிவீசுவது உண்டு. ஆனால் அவர்களுடைய வாதங்கள் இந்த இடஒடுத்துக்கீடின் தேவை எப்படி ஏற்பட்டது என்பதன் வேரினை அவர் ஆராய்பவராக இருக்கவில்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.


இன்று ஒடுக்கப்பட்ட சமூகம் என்று முத்திரையிடப்பட்டவர்கள் கல்வி மறுக்கப்பட்டவர்கள். அவர்கள் தாங்கள் ஏழைகள் என்பதற்காக அக்கல்வி மறுக்கப்படவில்லை. அதேசமயத்தில் ஏழைகளாக, தினந்தோறும் தமது உணவுக்கு பிச்சையெடுத்துவாழவேண்டும் என்ற சமூகக் கட்டுப்பாட்டினைக் கொண்ட உயர் வகுப்பினர் நூறுசதவீதம் கல்வியைக் கற்றனர், அது மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டது, ஏகலைவர்கள் சூழ்ச்சியால் மாய்க்கப்பட்டனர். இவற்றிற்கு எல்லாம் என்ன காரணம்?.. பணமா? இலையே இல்லை... சாதி மட்டுமே. தாழ்ந்த சாதியைச் சார்ந்தவன் அவனுக்கு அளிக்கப்பட்ட அடிமைப்பணியையே மட்டுமே செய்யவேண்டும் என்ற வர்ண பேத அடிப்படைதான். அப்படியிருக்க தனது சாதியின் காரணமாகவே கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு எப்படி பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீடு பொருந்தும்?


நேரு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் திரு.விவேக் குமார் சொல்லுவது போல எப்பொழுதெல்லாம், இடஒதுக்கீடு பற்றிய செய்தி எழுகின்றதோ அப்பொழுதெல்லாம் உயர் ஜாதியினர் மட்டுமே அறிவுஜீவிகள் மற்றவர்கள் எல்லாம் அடிமுட்டாள்கள் போன்ற எண்ணத்தை ஏற்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் புள்ளியியல் அவ்வாறு காட்டவில்லை என்கிறார் அவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறிவுஜீவிகளாக இருந்த அந்தணர்கள், கல்வி வழங்குவது அவர்தம் கடைமையாக இருந்தும், இந்தியா ஏன் இந்த அளவுக்கு கல்வியில் பின் தங்கியிருக்கிறது? வீர மரபினர் ஏன் ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவை அடிமைப்பட வைத்தனர்? என்று அவர் எழுப்பும் கேள்விகளில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. இவர்களை நம்பி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட சமூகம் கல்வி பெறாமல் இருக்கமுடியும்? இவர்களது அறிவுத்திறமையில் இவர்களால் முன்னேற்றத்தைக் கொடுக்கமுடியும் என்ற வாதத்தை எவ்வாறு நம்பமுடியும் என்கிறார் திரு.விவேக்.

இந்தியாவின் தற்காலத்தைய முன்னேற்றம் கூட அது தற்போது புழக்கத்தில் உள்ள இடஒதுக்கீடுகளினால் முன்னேறிய பிற்படுத்தப் பட்ட தாழ்த்தப்பட்ட சமுகத்தினரால் தான் என்றால் அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.