செந்தமிழ்

Tuesday, May 02, 2006

ஏன் குளிர்கண்ணாடி அணியவேண்டும்?

ஏன் குளிர்கண்ணாடி அணிய வேண்டும் - ஐந்து காரணங்கள்

1. நல்ல தரமான குளிர்கண்ணாடிகள் உங்கள் கண்களை சூரியனிடமிருந்து வெளிப்படும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களிடமிருந்து நூறு சதவீதம் பாதுகாக்கின்றன. கண்களை மட்டுமன்றி மிகவும் மென்மையான எளிதில் பாதிக்கப்படும் கண்களைச் சுற்றியுள்ள தோல் பகுதிகளையும் இவை காக்கின்றன அதன் மூலம் சுருக்கம் விழுதல், இளம் வயதிலேயே முதுமைத் தோன்றத்தைப் பெறுதல் போன்வற்றிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம்.

2.குளிர்கண்ணாடிகள் ஒளிச்சிதரலை குறைக்கின்றன. அனைத்துத் தளங்களும் ஒளியைச் சிதரடிக்கவல்லவை. பொதுவாக தண்ணீர், வாகனங்களின் கண்ணாடிகள் போன்றவை ஒளியைச் சிதரடித்து அவைகளை பல பக்கங்களிலும் பிரதிபலிக்கவல்லவை. இவை மிகவும் ஆபத்தானவை இத்தகைய ஒளிச்சிதரல்களின் பாதிப்பிலிருந்து நமது கண்களை குளிர்கண்ணாடிகள் காக்கின்றன. போலரைஷ்டு பூச்சுக்கொண்ட கண்ணாடிகள் இவ்வாறான ஒளிச்சித்ரல் பிரதிபலிப்பை முற்றிலுமாக குறைத்து நமது பார்வைக்கு ஒரு இனிமையான அனுபவத்தை தருகின்றன.

3.குளிர் கண்ணாடிகள் நமது கண்களை கொடுங்காற்று, தூசிகள், உடைந்து தெரித்து விழும் ஆபத்தான சிதரல்கள் போன்றவற்றிலிருந்தும் காக்கின்றன. கண்களை முழுமையாக மறைக்கக்கூடிய விதத்தில் தயாரிக்கப்படுகின்ற, விளையாட்டில் பயன்படுகின்ற குளிர்கண்ணாடிகள் இவ்வகையில் மிகச் சிறந்தவை.

4.அளவுக்கு அதிகமான வெளிச்சத்தை நமது கண்ணின் ஒளித்திரையினால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே நமது கண்ணின் மணிகள் சுருங்கி விரிந்து உள்செல்லும் ஒளியின் அளவை கூட்டியோ அல்லது குறைத்தோ கொடுக்கின்றன. இருளில் அதிகம் விரிந்தும், நல்ல ஒளியில் சுருங்கியும் ஒளியை உள்வாங்குகிறது. அப்படிச் சுருங்கியும் அதிகமான ஒளி உள்செல்லும் நேரத்தில் நமது கண்ணிமைகளும் சுருங்கி மேற்கொண்டு ஒளியைக் குறைத்து உள்செலுத்த உதவுகின்றன. இவ்வாறு நாம் அதிகமாக கண்களுக்கு அழுத்தம் கொடுத்து பார்க்க நேரிடுவதால் நமக்கு தலைவலி மற்றும் கண்களில் வலி மற்றும் சோர்வு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. குளிர்கண்ணாடிகள் அணிவதன் மூலம் போதுமான அளவுக்கு ஒளி வடிகட்டப்பட்டு உட்செலுத்தப்படுவதால் கண்களில் நாம் அழுத்தம் கொடுக்கவோ சுருக்கவோ தேவையில்லை. எனவே பார்வை சாதாரணமானதாகவும், கண்களுக்கு இதம் கொடுப்பதாகவும் இருக்கும்.

5. தெளிவான பார்வைக்கு குளிர்கண்ணாடிகள் பெரிதும் உதவுகின்றன. அதிகமான ஒளி எந்த அளவுக்குக் கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கின்றனவோ அதுபோலவே குறைவான ஒளியும். குளிர்கண்ணாடிகள் சரியாண அளவில் ஒளியை வடிகட்டி அணுப்புவதால் தெளிவான பார்வை நமக்கு கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு கண் பாதிப்புகள் வராமல் காக்கப்படும். கோடைகாலங்களில் வாகனங்களை ஓட்டுபவர் மற்றும் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக குளிர்கண்ணாடிகள் அணிவதன் மூலம் அதிவிரைவான கண்பாதிப்புகளைத் தவிர்த்து நல்ல தெளிந்த பார்வையோடு வாழலாம்.

Monday, May 01, 2006

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு

இன்றைய இளைய தலைமுறையினருக்கு இடஒதுக்கீடு பற்றிய சரியான அறிவு இல்லை என்பதும் அதுபற்றிய தெளிவான அறிவு அவர்களுக்கு ஊட்டப்படவேண்டும் என்பதிலும் எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இல்லை. இடஒதுக்கீடு பற்றிய விவாதங்களில் உயர்சாதியினர் போன்று பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் கலந்துகொண்டு தம்முடைய வாதங்களை எடுத்து வைக்க முன்வருவதில்லை என்பதும் வருத்தம் அளிக்கும் செய்தியே.

கடந்த ஆயிரக்கணக்கான வருடங்களாக நூறு விழுக்காடு இடஒதுக்கீட்டை தானாகவே எடுத்துக்கொண்ட உயர்ஜாதியினர் இன்று அவை பறிக்கப்பட்டு அதற்குப் பதிலாக வேறொருவருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பொழுது மனம் புழுங்குவதும், பொங்கியெழுவதும், போராட்டம் நடத்துவதும் இயல்பே. ஆனால் அவர்கள் இச்சமயத்தில் இங்கே முன்வைக்கும் வாதமோ "அறிவு மற்றும் சாதனைத் திறன்" பற்றியது. இடஒதுக்கீடு காரணமாக வளர்ந்துவரும் இந்திய தேசத்தில் அறிவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும், இது வளர்ச்சியில் மிகப்பெரிய தடைக்கல்லாக முன்னிற்கும் என்பது இவர்களுடைய வாதம்.

தனியார் நிறுவனங்களும் இதில் சலைத்தவர்கள் இல்லை. ஆசிம் பிரேம்ஜி, தன்னுடைய தொழிலானது அறிவு சார்ந்த பணித்துறை, இங்கு நான் அறிவு மற்றும் சாதனைத்திறன் அடிப்படையிலேயே வேலை வாய்ப்பு வழங்கமுடியும் என்று அறிவித்திருக்கிறார். இடஒதுக்கீடு என்பது தகுதியான மாணவர் வரிசையில் பின் தங்கிய வகுப்பினருக்கு சரியான சதவீதத்தில் நிரவல் இருக்கவேண்டும் என்பதேயொழிய அது முட்டாள்களை வேலைக்கு வைத்துக்கொள் என்பது இல்லை என்று அவர் அறியாமலிருக்கிறாரா என்ன?


இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை தமிழகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டான மாநிலமாக விளங்குவது கண்கூடு. இன்று அனைத்துத் துறையிலும் அனைத்துவகுப்பினரும் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். பொருளாதார ரீதியில் நன்கு வளர்ந்துள்ளது. எத்தனையோ உயர்வகுப்பினர் என்று கூறிக்கொள்ளும் அறீவு ஜீவிகள் தாமிழகமென்ன நாட்டைவிட்டே வெளியேறிவிட்ட பொழுதிலும் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் வெற்றிநடை போடுகிறது. வழக்குரைஞர்கள், மருத்துவர், பொறியியலார் என எல்லாத்துறைகளிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஒருகாலத்தில் வழக்குரைஞர் என்றால் இவர் இப்படித்தான் பஞ்சகட்சம் கட்டி, நன்றாக நாமத்தை மேலே இழுத்துவிட்டிருப்பார், ஆசிரியர் என்றால் இப்படித்தான் இருப்பார் என்ற உருவ வேற்றுமை மறைந்து மங்கியிருக்கிறது. இவையெல்லாம் எப்படிச் சாத்தியப்பட்டது என்பதை ஆராய்ந்து பார்த்தால் தமிழகத்தை ஆண்ட திராவிட இயக்கங்களை நாம் மெச்சியேயாக வேண்டும்.

சீதாராம் யெச்சூரி சொல்லுவது போல " இட ஒதுக்கீட்டால் திறமையானவர்களை உருவாக்குவது பாதிக்கும் என்று எடுத்துக்கொண்டால் நாம் மறைமுகமாக பணக்கார வர்க்கத்தினருக்கு அவ்விடங்களை ஒதுக்கியிருக்கிறோம் என்றே பொருள். எத்தனை பணக்காரர்கள் தனது அறிவுத்திறனால் உயர் மற்றும் தொழில் கல்லூரிகளில் இடங்களைப் பெருகிறார்கள்? மிக மிகக் குறைவு. ஆனால் அவர்கள் தனது பணபலத்தால் இடங்களை வாங்குகிறார்கள். வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீடுகள் ஏலமிடப்பட்டு அதிக விலைக்கு வாங்குபவர்களுக்கு இடங்கள் விற்கப்படுகின்றன. அவர்களை விட திறமையான பிற்படுத்தப்பட்ட, காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு இடம் கிடைப்பதில்லையே? "

சிலர் பொருளாதார ரீதியிலாகத்தான் இடஒதுக்கீடு அமையவேண்டும் அவ்வாறில்லாமல் சாதிவாரியாக ஒதுக்கீடு அளித்தலால் சாதி வேறுபாடுகள் இன்னும் கூடிக்கொண்டிருக்குமேயொழிய குறையாது என்று அவரவர் அறிவுக்கு எட்டிய வாதங்களை அள்ளிவீசுவது உண்டு. ஆனால் அவர்களுடைய வாதங்கள் இந்த இடஒடுத்துக்கீடின் தேவை எப்படி ஏற்பட்டது என்பதன் வேரினை அவர் ஆராய்பவராக இருக்கவில்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.


இன்று ஒடுக்கப்பட்ட சமூகம் என்று முத்திரையிடப்பட்டவர்கள் கல்வி மறுக்கப்பட்டவர்கள். அவர்கள் தாங்கள் ஏழைகள் என்பதற்காக அக்கல்வி மறுக்கப்படவில்லை. அதேசமயத்தில் ஏழைகளாக, தினந்தோறும் தமது உணவுக்கு பிச்சையெடுத்துவாழவேண்டும் என்ற சமூகக் கட்டுப்பாட்டினைக் கொண்ட உயர் வகுப்பினர் நூறுசதவீதம் கல்வியைக் கற்றனர், அது மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டது, ஏகலைவர்கள் சூழ்ச்சியால் மாய்க்கப்பட்டனர். இவற்றிற்கு எல்லாம் என்ன காரணம்?.. பணமா? இலையே இல்லை... சாதி மட்டுமே. தாழ்ந்த சாதியைச் சார்ந்தவன் அவனுக்கு அளிக்கப்பட்ட அடிமைப்பணியையே மட்டுமே செய்யவேண்டும் என்ற வர்ண பேத அடிப்படைதான். அப்படியிருக்க தனது சாதியின் காரணமாகவே கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு எப்படி பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீடு பொருந்தும்?


நேரு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் திரு.விவேக் குமார் சொல்லுவது போல எப்பொழுதெல்லாம், இடஒதுக்கீடு பற்றிய செய்தி எழுகின்றதோ அப்பொழுதெல்லாம் உயர் ஜாதியினர் மட்டுமே அறிவுஜீவிகள் மற்றவர்கள் எல்லாம் அடிமுட்டாள்கள் போன்ற எண்ணத்தை ஏற்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் புள்ளியியல் அவ்வாறு காட்டவில்லை என்கிறார் அவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறிவுஜீவிகளாக இருந்த அந்தணர்கள், கல்வி வழங்குவது அவர்தம் கடைமையாக இருந்தும், இந்தியா ஏன் இந்த அளவுக்கு கல்வியில் பின் தங்கியிருக்கிறது? வீர மரபினர் ஏன் ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவை அடிமைப்பட வைத்தனர்? என்று அவர் எழுப்பும் கேள்விகளில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. இவர்களை நம்பி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட சமூகம் கல்வி பெறாமல் இருக்கமுடியும்? இவர்களது அறிவுத்திறமையில் இவர்களால் முன்னேற்றத்தைக் கொடுக்கமுடியும் என்ற வாதத்தை எவ்வாறு நம்பமுடியும் என்கிறார் திரு.விவேக்.

இந்தியாவின் தற்காலத்தைய முன்னேற்றம் கூட அது தற்போது புழக்கத்தில் உள்ள இடஒதுக்கீடுகளினால் முன்னேறிய பிற்படுத்தப் பட்ட தாழ்த்தப்பட்ட சமுகத்தினரால் தான் என்றால் அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

Saturday, April 29, 2006

அடிப்படைக் கல்வியின் அவசியத் தேவை - மாற்றம்

நான் ஆண்டுகள் பலவாக விவாதித்தும் சிந்தித்தும் வருவது, அடிப்படைக் கல்வியில் கொண்டுவரும் மாற்றத்தின் மூலமாக எப்படி நாம் கூடுதல் சதவீதத்தினரை கல்வியறிவு பெறவைப்பது என்பதைத் தான். நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் காலத்தில் சாதாரணமாக 100 லிருந்து 150 மாணவ மாணவியர் முதல் வகுப்பில் படித்தனர். ஆனால் அவை குறைந்து கொண்டே வந்து தோராயமாக 90 மாணவர்கள் ஆறாம் வகுப்பில் படித்தனர், பின்னர் 25 லிருந்து 30 மாணவர்கள் மட்டுமே பத்தாம் வகுப்பிற்கு வந்து சேர்ந்தனர். அ,ஆ, இ,ஈ, உ என ஐந்து பிரிவுகளாக இருந்த ஒன்றாம் வகுப்பு குறைந்து அ, ஆ, இ என்று ஆறாம் வகுப்பிலும், பின்னர் ஒரே ஒரு பிரிவு வகுப்பு மட்டுமே பத்தாம் வகுப்பிலும் இருந்தது. இன்றும் எங்கள் ஊரில் அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 150 லிருந்து பத்து ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கை 30 ஆகிய காரணம் என்ன? மீதம் 100லிருந்து 120 மாணவ மாணவியருக்கு என்ன ஆனது? ஏன் அவர்கள் பள்ளியை விட்டு அகன்றனர்?. அதனைத் தொடர்ந்து ஆராய்ந்தோமானால் சிலர் படிப்பதற்காக வேறு இடங்களை நாடியிருக்கலாம். அவ்வாறு 30 மாணவர்களை கழித்தாலும் 70 லிருந்து 90 பேர்கள் எங்கே? ஏன் படிப்பை விட்டு விட்டனர்? அவர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.


1. குடும்பச் சூழல் காரணாம வேலைபார்ப்பதற்காக படிப்பை நிறுத்தியது

2. தொடர்ந்து படிக்க வைக்கப் பணமில்லாமலும் படிப்பை நிறுத்தியது

3.பெண்டிர் வயதுக்கு வந்தவுடன் தொடர்ந்து படிக்க வைக்க விரும்பாமல் படிப்பை நிறுத்துவது. என குறைந்துகொண்டே போய்

4.பெரும்பாலான மாணவர்கள் சரியாகப் படிக்காததால் வகுப்புகளில் தகுதித் தேர்வில் தோல்வியடைந்து அதே வகுப்பில் இருக்க வெட்கி, நாணி பள்ளிக்கு வராமல் படிப்பை நிறுத்துவது.

இவ்வாறு பள்ளிப்படிப்பை நிறுத்தியவர்களில் என்னுடைய கவனத்தை ஈர்த்தவர்கள் இந்த நான்காவது வகையைச் சார்ந்தவர்கள்தான். இவ்வகையில் படிப்பை நிறுத்துபவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். இதற்கு என்ன செய்யலாம். பள்ளியில் தேர்வுகளில் தேல்வியுரும் மாணவர்களை மேல் வகுப்புகளுக்கு அனுப்பாததால் என்ன நன்மை, அவ்வாறு அனுப்பினால் என்ன தீமை விளையப்போகிறது என்பதை சிந்தித்துப் பார்த்தோமானால் ஒரு முக்கிய மாற்றம் ஆரம்பக்கல்வியில் நாம் கொண்டுவரவேண்டியது அவசியம் என்பது புலனாகும். அந்த மாற்றம் என்று நான் கருதுவது மேல்வகுப்புக்குத் தேர்வு பெறத் தகுதிபெறும் முறையை முற்றிலுமாக உயர்நிலைப் படிப்புவரை அதாவது பத்தாம் வகுப்புவரை நீக்குவது தான்.

பொதுவாகவே மணவப் பருவத்தில் தோல்வியுரும் மாணவ மாணவியர் மீண்டும் பழைய வகுப்பிலேயே தனக்கு குறைந்த வயதுடைய, தனக்குத் தெரிந்து தன்னுடைய இளைய மணவர்களுடன் படிக்க நாணுவர். இது பெரும்பாலான மாணவர்களை பள்ளிக்கு தொடர்ந்து சென்று படிப்பதிலிருந்து தடுத்திருக்கின்றது என்றால் அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அதுமட்டுமல்லாது இவ்வாறு தேல்வியுரும் மாணவர் யாரும் படித்த சமூகத்திலிருந்தோ அல்லது உயர்சாதிப் பிரிவிலிருந்தோ வருபவர்கள் அல்லர் ஆனால் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, கல்வியறிவு இல்லாத பெற்றொர்களுடைய குழந்தைகளாகத்தான் இருப்பர். அதுவே நமக்கு எழுத்தறிவித்தலிலும், கல்வியறிவித்தலிலும் மிகப் பெரிய தடையாக விளங்கிவருகிறது.

அது மட்டுமல்லாது குழந்தைகள் உளவியலின்படி அணுகினோமேயானால் இளையபருவத்தில் மாணவர்கள் கல்வியின் தேவையையும், அதனால் விளையப் போகும் நண்மைகளையும் அந்த அளவுக்கு அறிந்தவர்களாகவோ, அல்லது உணர்ந்தவர்களாகவோ இருக்கப்போவது இல்லை அதிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு சொல்லவே வேண்டியதில்லை.

தேர்வில் தோல்வியிரும் மாணவணை அவனுடைய அடிப்படைக் கல்வியில் ஏற்படும் தேல்வியினைக் கொண்டு அவனுடைய எதிர்காலத்தை, அவனுடைய அறிவுத்திறமையை அளவிடுதலும் கடினம். ஒவ்வொரு மாணவனுக்கும் தன்னுடைய மாணவப் பருவத்தின் ஒரு பகுதியில் திருப்புமுனை ஏற்படுகிறது அது எப்பொழுது எப்படி வரும் என்பதை நாம் அருதியிட்டு உரைக்கமுடியாது. அந்த நிலையில் தான் அவன் படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்கிறான். படித்த தாய்தந்தையருடைய குழந்தைகள் அதை மிகக் குறைந்த வயதிலே பெறுகிறார்கள், கல்வியறிவு அற்ற பெற்றோருடைய குழந்தைகள் அதை மிகவும் தாமதமாகத் தான் பெருகிறார்கள்.

அது மட்டுமல்லாது அம்மாணவன் மேல்வகுப்பிற்குத் தகுதிபெற்றுச் செல்வதினால் கல்வித்திட்டத்திற்கோ, அல்லது அவனுடன் பயிலும் பிற மாணவர்களுக்கு தகுதி நிலையில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை ஆனால் இந்த கல்வியில் பின் தங்கிய மாணவன் கூடுதல் வாய்ப்பைப் பெருகிறான் சில சமயங்களில் சக மாணவர்களின் நல்ல நட்பினால் உந்தப்படுகிறான். அவனால் பின்னர் அனைவருக்கும் சமமாக படிக்க, தேர்வில் வெற்றிபெற முடிகிறது அவன் அவனைத் தாயார் படுத்திக்கொள்கிறான்.

ஆகவே நம்முடைய தலையாய கடமை முதலில் தகுதி தேர்வின் மூலம் பள்ளியில் மேல்வகுப்புக்குத் தேர்வு செய்யாமல் பத்தாம் வகுப்பு வரை அனைவரையும் மேல் வகுப்புக்கு அனுப்பவேண்டும் அவ்வாறு செய்தோமானால் நிச்சயமாக கல்வியறிவு பெறும் சதவீதம் மிக அதிகமாகக் கூடும் என்பதில் ஐயமில்லை.


Wednesday, April 26, 2006

சந்திரனுக்குப் போவதில்...

கடந்த பாரதீய ஜனாதா ஆட்சியில் இந்தியா முன்னெப்பொழுதும் இல்லாததைவிட உலகநாடுகளின் கவனத்தைப் பலமுறை கவர்ந்தது. தெற்காசியாவைத் தவிர பலநாடுகளில் இந்தியாவைப் பற்றிய அறிவு கணக்கிலெடுத்துக்கொள்ளமுடியாத அளவுக்கும் குறைவாகவே கணப்பட்டுவந்தது முற்றிலும் உண்மை. பல படித்த அமெரிக்கர்களுக்கே இந்தியா என்றொரு நாடு இருக்கிறது என்பதே தெரியாத நிலை. அந்தச் சூழலில் தான் இந்தியா தன்னுடைய இரண்டாவது அணுகுண்டுச் சோதனையை நிகழ்த்தியது. இது உலகம் முழுதும் இந்தியாவை பற்றிய ஒரு விழிப்புணர்வுக்கு வழிவகுத்தது என்பதில் ஐயமில்லை. அதன் பின்னர் என்னதான் பல பொருளாதார, தொழில்நுட்பத் தடைகளை உலகநாடுகள் விதித்தாலும் அவைகளைக் கடந்தும் இந்திய தன்னுடைய வளர்ச்சியை அதிகரித்துக்கொண்டுதான் வந்துள்ளது.

அணுகுண்டுச் சோதனையைத் தொடர்ந்து இந்தியா தன்னுடைய GSLV இராக்கெட்டுகளை ஏவிச் சாதனை செய்ததது. இதுவரை உலகில் ஐந்துநாடுகளே இத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதால் இதுவும் இந்தியாவின் பெயர் உலக அரங்கில் பரவலாகப் பேசப்பட வழிவகுத்தது. இதன் முக்கிய காரணம் என்னவெனில் GSLV தொழிநுட்பத்தில் பயன்படும் இராக்கெட் தொழில்நுட்பம் தான் கண்டம் விட்டு கண்டம் பாயும், பல ஆயிரம் கிலோமிட்டர்கள் கடந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரிக்கப் பயன்படுகிறது என்பதே. இத்தகைய இராக்கெட்டுகளுக்கான முக்கிய தேவை கிரையோஜெனிக் என்னும் தொழில்நுட்பத்தில் இயங்கும் எந்திரங்கள்தான். இவை இந்தியாவில் ஆராய்ச்சி அளவிலேயே இருந்துவந்தாலும் சோதனைத் தேவைக்கு மட்டுமென அவை ரஷ்ய நாட்டிடம் இருந்து வாங்கியே GSLV விண்ணூர்திகள் விண்ணில் ஏவப்பட்டன.


இத்தகைய GSLV விண்ணூர்தி ஏவலில் ஏற்பட்ட வெற்றியின் தொடர்ச்சியாகவே அப்போதைய வாஜ்பேயி அரசு சந்திரனுக்கு விண்கலன் ஒன்றை ஏவும் திட்டத்திற்கான அறிவிப்பையும் வெளியிடப்பட்டது. 2003 ஆம் ஆண்டு சுதந்திர தினப் பேருறையில் அவ்வறிவிப்பை வெளியிட்ட வாஜ்பேயி, சந்திராயன் - 1 எனப் பெயரிடப்பட்ட இத்திட்டத்தின் மூலம் வரும் 2008 சந்திரனுக்கு ஆளற்ற அவ் விண்கலம் செலுத்தப்படும் என்றும் அறிவித்தார்.


இதில் முக்கிய அம்சம் என்னவெனில் 400 கோடி செலவு பிடிக்கக் கூடிய இத்திட்டம் இந்தியாவுக்குத் தேவையா என்பதுதான். பொருளாதாரத்தில் பின் தங்கிய இன்னும் எத்தனையோ அடிப்படைத் தேவைகளே பூர்த்திசெய்யப்படாத நிலையில் இருக்கும் பொழுது இவ்வளவு பணத்தையும் எந்தஒரு பிரயோஜனமும் இல்லாத, (அதாவது சந்திரனுக்கு விண்கலனை அனுப்பிய நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையத் தவிர) ஒரு திட்டத்தில் செலவிடுவது நியாயமா? என்பது பலரின் கருத்து.


இந்தப் பணத்தில் நல்ல சாலைகள் அமைக்கலாம், கிராமங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கலாம். வேலை வாய்ப்பைப் பெருக்க நட்டின் தேவைக்கு ஏற்ப தொழிற்சாலைகளை ஏற்படுத்தலாம், அவையே இன்றைய இந்தியாவின் தேவை. உலகநாடுகள் மத்தியில் வளமான, பொருளாதாரத்தில் வலிமையான இந்தியாவால் மட்டுமே ஒரு போற்றத்தக்க எல்லாராலும் மெச்சத்தக்க நிலையை அடையமுடியுமே தவிர, தன்னுடைய குடிமக்களில் பாதிப்பேர் தினசரி சரியான உணவு கூட கிடைக்காமல் திண்டாடும் நிலையில், எத்தனையோ பட்டினிச் சாவுகள் விவசாயிகள் மத்தியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சூழலில் சந்திரனுக்கு விண்கலன் ஏவும் முயற்சியில் வரிப்பணத்தை செலவு செய்வது தகாதது என்ற ஒரு பாலரின் கருத்தும் ஏற்றுக்க்கொள்ளத்தக்கதாகவே உள்ளது.

அதுமட்டுமல்லாது, சந்திரனுக்கு விண்கலன் என்ன? மனிதனை அனுப்பியே பல ஆண்டுகள் ஆகிவிட்டபோது நாம் மீண்டும் பலகோடிகள் செலவு செய்து இம்முயற்சியில் இறங்குவது எவ்விதத்தில் நியாயமாக இருக்கமுடியும். இராக்கெட் தொழிநுட்பம் வர்த்தகரீதியில் வெற்றிபெற்றது போல இந்தியா பணத்தை செலவிடும் போது சந்திராயன் வர்த்தகரீதியில் இந்தியாவிற்கு எவ்வித பலனைக் கொடுக்கப்போகிறது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

ஆனால் ஆய்வாளர்கள் ஒரு சிலர் சொல்லுவது போல எரிபொருள் தேவை அதிகரித்து வரும் இக்காலத்தில் புதிய எரிபொருள் ஆதாராங்களை விண்ணில் தேடும் முயற்சியாக இன்றைய வளர்ந்த நாடுகள் விண்ணியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அவற்றோடும் நாமும் களத்தில் இருக்கவேண்டிய கட்டாயம் இன்றைய வளர்ந்துவரும் இந்தியாவுக்கு அதிகம் உண்டு. மிகக் குறைவான அளவே பூமியில் உள்ள யுரேனியம் போன்ற தாதுக்கள் மேலும் மேலும் குறைந்துகொண்டே போக, நாம் புதிய எரிபொருள் ஆதாரத்தை கண்டறிய வேண்டிய காலம் இது. இது மனித குலத்திற்கே மிகவும் அவசியம். சந்திரனில் ஹீலியம்3 என்ற தாது அதிக அளவில் காணப்படுகிறது, இது பூமியின் எரிபொருள் தேவையை பல ஆயிரம் கால ஆண்டுகளுக்கு பூர்த்திசெய்யவல்லது என்பது ஆய்வளர்களின் கருத்து.. மேலும் அங்கு யுரேனியம் போன்ற தாதுக்கள் கிடைக்கின்றனவா என்ற ஆய்வும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

இந்த காலகட்டத்தில் நாம் சந்திரனைப் பங்கு போட்டுக்கொள்ள எடுக்கும் முன்முயற்சிதான் நம்முடைய எதிர்காலத்தில் நாம் நம்மை வல்லரசாக்க எடுக்கும் முதல் பெரிய முயற்சியாகவும் இருக்கலாம்.